ஞாயிறு, 7 அக்டோபர், 2012

தமிழர் விழா -- பொங்கல் விழா


தமிழர் விழா -- பொங்கல் விழா
அந்த சொற்றொடருக்கு தகுதி வாய்ந்தவர்களா என்று ஆராயப் புகுந்தோமானால் நிறைய சான்றுகள் நமக்கு கிடைக்கும். நிறைய தகுதிகளுடன் வாழ்ந்து இருக்கிறோம். நாகரிகத்தின் உச்சியிலும், பண்பாட்டின் உச்சியிலும் இருந்ததற்கான சான்றுகள் பல. வரலாற்று ஆய்வார்கள் பல சான்றுகள் வழங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இலக்கியங்களும் பல வழங்கியிருக்கிறது. ஆம்! அவை,
இதில் “யாதும் ஊரே , யாவரும் கேளீர்." என்ற சொற்றொடர் நிப்பான் நாட்டு நாடாளுமன்றத்தின் முகப்பில் எழுதி வைத்துள்ளார்கள். 'யாதும் ஊரே , யாவரும் கேளீர்.' என்ற எண்ணம் மற்றவர்களையும் எவ்வளவுத் தாக்கம் செய்துள்ளது என்பதை அறியும் போது நம்முடைய எண்ண்ங்களின் பரந்த மனப்பான்மை பொதுமை நோக்கும் அறிய முடிகிறது.
'விழா' என்பது விழைந்து செய்வது; விரும்பிச் செய்வது; நலன் கருதிச் செய்வது; அன்புடன் கூடுவது; பண்புடன் பழகுவது; மகிழ்ந்து கொண்டாடுவது; ஆடிப் பாடுவது; மனைவி மக்கள் சுற்றத்துடன் உண்பது; உறவினர்களுடன் உறவாடுவது; நண்பர்களுடன் நட்பாடுவது; புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் தருவது; ஊக்கம் ஊட்டுவது; ஆக்கம் அளிப்பது; வாழ்ந்த வரலாற்றை நினைவு கூர்வது; வாழ்கின்ற வாழ்வை ஆராய்வது; எதிகால வாழ்வுக்குத் திட்டம் தீட்டுவது; அம்மட்டோ! விழா, ஓர் இனமக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், வரலாறு, அரசியல், குமுகாயவியல் முதலியவற்றைப் முரசொலிப்பதாக அமைதல் வேண்டும். அந்த மக்களுக்கு உரிமை உணர்வையும், விடுதலை வேட்கையையும் உணர்த்துவதாக இருத்தல் வேண்டும்' - பாவாணரின் இலக்கணத்திற்குட்பட்டு ஏற்படுத்தப்பட்ட விழா தான் பொங்கல் விழா.
முதல் நாள், போக்கி திருநாள் என்று அழைக்கப்படுகிறது. 'போக்கி' என்பது போக்குதல் என்ற பொருளில் கொள்ளப்பட்டால், தூய்மை செய்தல் ஆகும். ஆம், பொங்கலுக்கு முந்தைய நாள், நம் புற அழுக்குகளை, பழையவற்றை அகற்றி, அதாவது பழைய துணிகள் , தேவையற்றப் பொருள்களை அகற்றி வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மைப் படுத்துவதும். மேலும், மனதிலுள்ள அழுக்குகளையும் நீக்கி இனி ஒரு புதிய சூளுரைக் கொள்ள செய்யவும் எடுக்கப்படும் விழாவாகும். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற சொல்லடைக்கு பொருந்துவதாகயுள்ளது.
இதே போக்கி நாளை, போகி நாள் என்றும் அழைத்தல் சரியே என்கிறார் கவிஞர் கண்ணதாசன். போகி என்ற சொல் 'போகம்' என்ற சொல்லிருந்து வந்தது என்று கூறுகிறார். போகம் என்றால் விளைச்சல் எனப்படும். விளைச்சலுக்குரியவன், போகத்துக்குரியவன் என்பார்கள். போகத்துக்குரியவர்கள் நிலச்சுவான்தார்கள் . அதனால்தான் அந்த விழா நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும். போகத்துக்குரியவன் விழா , போகி விழா என்பார்.
அடுத்த நாள், தை முதல் நாள். அந்த நாள் பொங்கல் திருநாள் எனக் கொண்டாடுகிறோம். வேளாளண் ஆகிய நமக்கு மறைமுகமாக துணைபுரியும் கதிரவனுக்கு நன்றி மறவாமல் கொண்டாடும் திருநாள். அன்றைய நாள், புதுப் பானையில், புது நெல்லிட்டு , புது மஞ்சள் கட்டி, புதுக் கரும்பு வைத்து, புது அடுப்பில் திறந்த வெளியில், கதிரவனை நோக்கி பொங்கலிட்டு கதிரவனுக்கு தன் நன்றியை கூறிடும் திருவிழா. வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்குரிய விழாவாகும்.
இதே நாளை 500 புலவர்கள், மறைமலையடிகள் அவர்கள் தலைமையில் கூடி தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு பிறப்பு என்று முடிவு செய்தனர். அதே நேரத்தில் இத்தொடர் ஆண்டை திருவள்ளுவர் ஆண்டு என பெயரிட்டனர். இப்போதைய ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் தற்பொழுதைய திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும் என்றும் அறுதியிட்டனர். தமிழர்களாகிய நாம் இத் திருநாளை தமிழர்களின் புத்தாண்டு பிறப்பாக கொண்டாட வேண்டும். “தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்" என்ற முதுமொழி இதை அடிப்படையாக கொண்டு உருவானதுதான்.
அடுத்த நாள், காணும் பொங்கல் திருநாள் அல்லது கன்னிப் பொங்கல் திருநாள் என்று கூறுகிறார்கள். உழவர்கள் தன் சுற்றத்தாருடனும், உற்றாருடனும் கூடிக் குலாவி, மகிழ்ச்சியுடன் பேசி பழகி மகிழ்ச்சியாக இருக்கவும், வருங்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும், எதை நோக்கிச் செல்லவேண்டும் என்ற திட்டமிடலுக்காவும் கொண்டாடப்படும் திருநாள் காணும் பொங்கல் திருநாள். உணவைப் பகிர்ந்துக் கொள்ளும், நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொது மக்களின் விழா என்றும் கவிஞர் கண்ணதாசன் செப்புகிறார். மற்றொரு கரணியமும் கூறப்படுகிறது. அதாவது, கன்னியர்கள் தன் உள்ளக்கிடங்கை கூறி பொங்கலிட்டு வணங்கும் திருநாள் என்பதால் இதை கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கிறார்கள்.
கட்சி என்ற காட்சிகளைக் கலைத்து, சாதி என்ற சனியனை சாய்த்து, மதம் என்ற மாச்சரியங்களை மாற்றி அனைவரும் பொங்கல் விழா கொண்டாடுவதன் மூலம் தமிழர் என்ற ஓர்மை உணர்வை உலகுக்கு பறைச் சாற்றுவோம். நம் மீது போர்த்தப்பட்டுள்ள கட்சி, சாதி, மதம் என்ற போர்வையை நீக்கி, என்றும் தமிழர்கள் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.